ஆழ்கடலுக்குள் தத்தளித்த 17 மீனவர்கள் பத்திரமாக மீட்க்கப்பட்டனர்

குமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 9-ந்தேதி இரவு 10 மணிக்கு ஒரு விசைப்படகு மூலம் 17 மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

அந்த படகில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ததேயுஸ், மைக்கேல், வசந்த், அருள், சபின், டான், லூக்காஸ், கண்ணையா, ஜாக்சன், ஜார்ஜ் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 2 மீனவர்கள், வங்காளதேசத்தை சேர்ந்த 5 மீனவர்கள் என்று மொத்தம் 17 மீனவர்கள் இருந்தனர்.

அவர்கள் இன்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மீன்பிடி வலை படகின் எந்திரத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் படகு கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து குளச்சலில் உள்ள மற்ற மீனவர்களுக்கு இந்த தகவலை படகில் தத்தளித்த மீனவர்கள் தெரிவித்தனர். உடனடியாக மீனவர்களை மீட்பதற்காக குளச்சலில் இருந்து ஒரு விசைப்படகும், கன்னியாகுமரியில் இருந்து ஒரு விசைப்படகும் ஆழ் கடலுக்குச் சென்றது.

மீட்பு படகுகள் சென்ற போது நடுக்கடலில் பழுதான படகு கடல் நீரில் மூழ்கி இருந்தது. அதில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்கள் 17 பேரையும் குளச்சல் விசைப்படகில் ஏற்றி குளச்சல் மீன்பிடிதுறை முகத்திற்கு இன்று காலை 7 மணி அளவில் அழைத்து வந்தனர்.

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்கப்பட்ட தகவல் குளச்சலில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று அந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*