மண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோல்.. ஒலிம்பிக் ஜோதி வெடித்து பள்ளி மாணவன் உடல் கருகி பலி!

மண்ணெண்ணைக்கு பதிலாக பெட்ரோல் பயன்படுத்தப்பட்ட ஒலிம்பிக் ஜோதியை மாணவனிடம் கொடுத்து மைதானத்தை சுற்றி ஓட சொல்லி இருக்கிறார்கள். இதில், தீப்பந்தம் திடீரென வெடித்ததில், மாணவன் உடல் கருகி உயிரிழந்தே விட்டான்! செங்கல்பட்டு ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் போன மாதம் 30ஆம் தேதி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி தொடங்கியதும், 12ஆம் வகுப்பு மாணவன் விக்னேஷிடம் ஒலிம்பிக் தீபத்தை தந்து மைதானத்தைச் சுற்றி ஓட விட்டுள்ளனர். 

தீப்பந்தத்தில் பொதுவாக மண்ணெண்ணெய்தான் எரிபொருளாக பயன்படுத்தப்படும். ஆனால், இதில், இதனுடன் பெட்ரோல் கலந்து பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. தீப்பந்தத்தை தூக்கி கொண்டு விக்னேஷ் ஓடும் போது, திடீரென தீப்பந்தம் வெடித்து, அந்த தீ அவன் மீது பட்டுவிட்டது. காற்றின் வேகமும் திடீரென கூடியதால், மாணவன் உடல் முழுவதும் தீ பற்றிவிட்டது. இதனால் அங்கிருந்தோர் பதறி அடித்து கொண்டு மாணவனை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். 

அங்கு விக்னேஷூக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வந்தது ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.ஒலிம்பிக் ஜோதியை தயார் செய்ய தெரியவில்லை என்றும், தீப்பந்தத்தை பிடிக்க முறையான பயிற்சியை மாணவனுக்கு தரவில்லை என்றும் பள்ளி நிர்வாகம் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. 

அது மட்டுமில்லை, விளையாட்டுப் போட்டி நடத்த மாவட்ட கல்வி அதிகாரியிடம் அனுமதி பெறவில்லை என்றும் சொல்கிறார்கள். மாணவன் உயிரிழந்த நிலையில், பள்ளிக்கு 3 நாள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இது சம்பந்தமாகவும் விசாரித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*