குமரி பேஸ்புக் நண்பர் திருமணத்துக்கு வந்த இருவர் பரிதாபமாக பலி

குமரியில் பேஸ்புக் நண்பர் திருமணத்துக்கு வந்த இடத்தில் ராட்சத அலையில் சிக்கி இளம்பெண் உட்பட இருவர் பரிதாபமாக இறந்தனர். 

குமரி மாவட்டம் குளச்சல் அருகே இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வினோபின்ராஜ் (வயது 30). இவருடைய திருமண விழாவுக்கு  தன்னுடைய பேஸ்புக் நண்பர்களை அழைத்து இருந்தார்.

அதன்படி திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வினோபின்ராஜின் பேஸ்புக் நண்பர்களான திருப்பூர் மாவட்டம் ஆத்துக்கிணத்துப்பட்டியை சேர்ந்த சங்கீதா (23), சேலம் மாவட்டம் காசி முனியப்பன் தெருவை சேர்ந்த மோகன் (33), ஈரோட்டை சேர்ந்த சாஜித் (30) நெல்லையை சேர்ந்த பாலசுப்புரமணியன் (27), அருப்புக்கோட்டையை சேர்ந்த ஷியாமிளா (28) மற்றும் அவருடைய குழந்தைகள் ஹரிணி (8), கார்த்திகேயன் (3) 7 பேர் நேற்று இனயம் புத்தன்துறைக்கு வந்தனர். அவர்களை வினோபின்ராஜ் அந்த பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் தங்க வைத்தார்.

காலையில்  அனைவரும் இனயம்புத்தன்துறை கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ளும் முன்  அங்குள்ள கடற்கரையில் நின்று கடல் அழகை ரசித்தபடி கால்களை நனைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ராட்சத அலை ஒன்று கரையை நோக்கி வேகமாக வந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத சங்கீதா, மோகன் ஆகிய இருவரும் அலையில் சிக்கினர். 2 பேரையும் கண் இமைக்கும் நேரத்தில் அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதைக்கண்டு அவருடைய நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சங்கீதா மீட்கப்பட்டார். மோகனை ராட்சத அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

மீட்கப்பட்ட சங்கீதாவை புதுக்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சங்கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ராட்சத அலை இழுத்துச் சென்ற மோகன் உடல் கிடைக்கவில்லை  மீனவர்கள் உதவியுடன் அவரை தேடும் பணியில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பின் மோகன் உடல் மீட்கப் பட்டது  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அலையில் சிக்கும் முன் மோகன் தன் முகநூல் பக்கத்தில் ஆலயம் முன்பு முகநூலில் நேரலை செய்துள்ளார்.  அதில் இந்த பகுதி குறித்தும் மக்களின் கலாச்சாரம் உணவு குறித்தும் வியந்தார். இப்படி ஒரு ஊரில் பிறக்க கொடுத்து வைக்கவில்லை என்றார்.  அப்படி சொன்னவர் சில மணி  நேரத்திற்குள் அந்த கிராமத்தில் இறந்தது பெரும் சோகமான சம்பவம் 

குமரியில் பேஸ்புக் நண்பர் திருமண விழாவுக்கு வந்த இடத்தில் இருவர்  ராட்சத அலையில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*