இரையுமன்துறையில் தற்போது உள்ள மண் சாலையை பராமரித்து பயன்படுத்தாமல் ஆற்றோரத்தில் துறைமுக சாலை அமைக்க கோரியும் , இரையுமன்துறை ஊரின் பாதுகாப்புக்கு மூன்று தூண்டில் வளைவுகள் அமைக்க கோரியும் இரையுமன்துறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது .
ஆற்றோரம் துறைமுக சாலை மற்றும் தூண்டில் வளைவு கோரி இரையுமன்துறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
இரையுமன்துறையில் துறைமுக பயன்பாட்டிற்கு தற்போது உள்ள மண் சாலையை பராமரித்து பயன்படுத்தாமல் ஆற்றோரத்தில் துறைமுக சாலை அமைக்க கோரியும் , இரையுமன்துறை ஊரின் பாதுகாப்புக்கு மூன்று தூண்டில் வளைவுகள் அமைக்க கோரியும் இரையுமன்துறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது .இரயுமன்துறை புனித லூசியாஸ் தேவாலயம் முன் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு இரயுமன்துறை பங்குத் தந்தை ரெஜீஷ்பாபு தலைமை வகித்தார். துணை பங்குத் தந்தை செபாஸ்டின் முன்னிலை வகித்தார். பங்கு நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதில், இரயுமன்துறை கிராமத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் மீன் இறங்கு தளத்திற்கு வாகனங்கள் தங்குதடையின்றி வந்து செல்வதற்கு வசதியாக தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தை வலுப்படுத்தி சாலை அமைக்க வேண்டும், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள படகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவதைத் தடுக்க ஆற்றின் கரையோரம் கட்டமைக்கப்படும் சாலையின் ஓரத்தில் விசைப்படகுகள் நிலைநிறுத்தத் தடுப்புகள் அமைக்க வேண்டும், இரயுமன்துறை கிராமத்தில் 3 தூண்டில் வளைவுகள் அமைத்து இக்கிராமத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும், எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாமல் திறக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தில் கழிப்பறை, மின்விளக்குகள், கண்காணிப்பு கேமரா, முதலுதவி மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறுவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தில் இரையுமன்துறை மக்கள் மட்டுமின்றி பக்கத்து கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்
Be the first to comment