மீன்பிடிக்கச் சென்று 49 நாட்களாகியும் கரை திரும்பாத காசிமேடு மீனவர்கள்

காசிமேடு மீன்பிடித் துறை முகத்திலிருந்து கடந்த 23-07-2020 அன்று மீன்பிடிக்கச் சென்றவர்களில் 10 பேர் இதுவரை கரைதிரும்பவில்லை. அவர்கள் சென்ற விசைப் படகின் எண் IND-TN-02-MM 2029.
காணாமல் போனவர்களில்  எட்டு பேர் திருவொற்றியூரில் உள்ள ஆல் இந்தியா ரேடியோ நகரில் வசித்து வந்தவர்கள். இதற்கு முன்னதாக இவர்கள் திருச்சினாங்குப்பம், திருவொற்றியூர் குப்பம், லட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து இங்கு குடியேற்றப்பட்டவர்கள்.

படகு கரையில் இருந்து புறப்பட்ட இரண்டு மணி நேரத்தில் ஜி.பி.எஸ். செயலிழந்துள்ளது . அதே நேரத்தில், கடந்த 28-07-2020 அன்று அந்த விசைப்படகில் இருந்தவரோடு வாக்கி-டாக்கி சிக்னல் கிடைத்ததாக வேறொரு படகைச் சேர்ந்தவர்கள் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. பத்து நாட்களில் கரை திரும்பி இருக்க வேண்டிய மீனவர்கள் 49 நாட்களாகியும் இன்றுவரை கரை திரும்பவில்லை.

காணாமற் போன மீனவர்களின் குடும்பத்தார் ஒவ்வொரு நாளும் காசிமேட்டில் உள்ள மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வந்து அழுதவாறு காத்துக் கிடக்கின்றனர்.

ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம்  ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்து விட்டோம் என்றும் தமிழகக் கடலோரக் காவல் படை 20 கப்பலில் தேடிக் கொண்டிருக்கிறது என்றும் வங்கதேசக் கடற்கரையில் தவறுதலாக கரையொதுங்கியுள்ளனரா? என்று தெரிந்துகொள்ள தூதரகத்திற்கு  மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், தேடுதல் முயற்சிகளில் கண்டறியப்பட்டது என்ன?, வங்கதேசத்தில் இருந்து பதில் தரப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை . இத்தனை நாட்களாகியும் முன்னேற்றம் இல்லாத நிலையில் இந்தியக் கடற்படையைத் தேடுதல் பணியில் ஈடுபடுத்துவது குறித்து நடுவண் அரசுக்கு கோரிக்கை வைத்ததாகவும் தெரியவில்லை . இது மீனவ மக்களிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இந்த  விசயத்தில் மெத்தனமாக இருப்பது வேதனையான ஒன்று . 

கம்பியில்லாத் தொலைத் தொடர்பு வசதி வழங்கும் திட்டம் என்றும் செயற்கைகோள் அடிப்படையிலான ‘டிரான்ஸ்பாண்டர்கள்’ என்றும் மீன்பிடிப்பிற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் மீன்பிடி கலன்களைக் கண்காணிப்பதன் மூலம் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கைப்பேசி செயலி “தூண்டில்” என்றும் மீன்வளத் துறை அமைச்சர் 2019-20 ஆண்டிற்கான மீன்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பேசினார். ஆனால், நடைமுறையைப் பொறுத்தவரை மீனவர்களின் பாதுகாப்புக்கான தமிழக அரசின் அக்கறை அதலபாதாளத்தில் இருக்கிறது.  விளிம்பு நிலை மீனவ மக்களின் பிரச்சனைகள் கண்டுங் காணாமல் போவதன் பகுதியாகவே மீனவர்களின் உயிர்ப் பிரச்சனையும் அணுகப்பட்டு வருகின்றது.

எனவே , வங்கதேசம் மற்றும் மியான்மர் தூதரகங்களைத் தொடர்புகொண்டு அந்நாட்டுக் கடற்கரைகளில் நமது மீனவர்கள் தவறுதலாக  கரையொதுங்கியுள்ளனரா? என்பதைக் கண்டறியுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கடலோரக் காவல்படை தேடிக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடற்படையைப் பயன்படுத்தித் தேடுவதற்கு நடுவண் அரசின் உதவியை நாட வேண்டும். மீனவர்களைத் தேடுவதன் பொருட்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள், முயற்சிகள் மற்றும் அவற்றில் இருந்து பெற்ற விவரங்கள் ஆகியவற்றைக் காணாமல் போனவர்தம் குடும்பங்களுக்கு வெளிப்படையாக அன்றாடம்  தெரிவிக்க வேண்டும்.

அரசு இன்னமும் மெத்தனம் காட்டாமல் 10 மீனவர்களையும் மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனபதே ஒட்டு மொத்த மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*